Ad Widget

சாரதிப் பயிற்சிப் பாடசாலை உரிமையாளர்களுக்கு ஆளுநரின் புதிய உத்தரவு!!

வடக்கு மாகாணத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சாரதிப் பயிற்சி பெறுபவர்களுக்கு செயன்முறை பயிற்சியை இரவில் கட்டாயம் வழங்கவேண்டும் என்று மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்கும் இடையேயான சந்திப்பு கடந்த 23ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு இன்று அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கள் உடல் அவயவ இழப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக ஆளுநரினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒரு அங்கமாகவே சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுடனான இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சாரதி பயிற்சி பாடசாலைகள் அனுமதிப் பத்திரத்திற்கான பயிற்சிகளை வழங்கும் போது தரமானதும் முறையானதுமான பயிற்சிகளை வழங்கினால் இவ்வாறான வீதி விபத்துகளை குறைத்துக் கொள்ளலாம் எனவும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

அத்தோடு சாரதி அனுமதிப்பத்திரம் பெற வருபவருக்கு குறைந்தது 30 மணித்தியாலங்கள் செயன்முறைப் பயிற்சியும் 10 மணித்தியாலங்கள் அப்பியாசப் பயிற்சியையும், இந்த செயன்முறை பயிற்சியில் இரவில் வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சியும் வடமாகாணத்தின் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் அனைத்தும் கட்டாயமாக வழங்க வேண்டுமென்றும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

என்பு முறிவு சத்திரச்சிகிச்சை நிபுணர் ரி.கோபிசங்கர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ”வடமாகாண வீதி பாதுகாப்பு சபையின்” ஊடாக சாரதி பயிற்சி பாடசாலைகளானது பயிலுனர்களுக்கு இந்த பயிற்சிகளை சரியான முறையில் வழங்குகின்றனரா என்பதை கண்காணிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சாரதிப் பயிற்சிகளை வழங்குவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லை என்பதை சுட்டிக்காட்டிய உரிமையாளர்கள் பொருத்தமான இடமொன்றை தமக்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர், பொருத்தமான இடமொன்றை அதிகாரிகளுடன் கலந்துரையாடி பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்- என்றுள்ளது.

Related Posts