Ad Widget

சமூகவலைத்தளங்கள் முடக்கம் – அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என்கிறது ஆய்வு முடிவு!

இலங்கையில் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டதன் ஊடாக அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளரும், மென்பொருள் பொறியியலாளருமான பெதும் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘குறித்த காலப்பகுதியில் 58 சதவீதமானோர் வீ.பி.என் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக ஊடகங்களுக்குள் பிரவேசித்துள்ளனர்.

இதன்போது, 9 சதவீதமானோர் கருத்துத் தெரிவிப்பதை தவிர்த்திருந்தனர்.

அத்துடன், என்னால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் 95 சதவீதமானோர் வீ.பி.என் தொழில்நுட்பம் பற்றிய சரியான தகவல்களை தெரிந்து கொள்ளாமலேயே அவற்றை பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் சிலர் தமது கைப்பேசிகளில் வீ.பி.என் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக, தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு 100 ரூபாய் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர்.

நூற்றுக்கு 43 சதவீதமானோர் சமூகவலைத்தள முடக்கத்தை வீண் முயற்சி என்றும், 29 சதவீதமானோர் தமது நாளாந்த தொடர்பாடல் தடைப்பட்டுள்ளதாகவும், 37 சதவீதமானோர் இந்த சமூகவலைத்தள முடக்கத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சில பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள் தமது பாடங்களை கற்பிப்பதை விடுத்து, வீ.பி.என் மற்றும் அதனை நிறுவும் முறை தொடர்பாக கற்பித்துள்ளனர்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts