எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தஹாப்-நுவைபா வீதியில் அல்-சாடா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிப் பயணித்தபோதே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி 16 பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 28 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்து சுகாதார அமைச்சர் காலித் அப்தெல் கஃபார் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவச் சிகிச்சை, மருந்துகள் மற்றும் உபகரணங்களை விரைவாக வழங்கிட அப்பகுதியிலுள்ள மருத்துவ வசதிகளை உச்சகட்டத் தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவக் குழுவினர் நிலமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து எகிப்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.