Ad Widget

கொலையுண்டவரின் சகோதரர்கள் கைது

arrestகோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (16) வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொலையுண்டவரின் இரண்டு சகோதரர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர், உரும்பிராயினைச் சேர்ந்த இருவரை தாக்கிப் படுகாயமடையச் செய்தமை தொடர்பிலே இருவரும் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி சம்பவத்தில் கோண்டாவிலினைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியிருந்ததுடன், அவரது சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

பலியாகிய சுகிர்தன் திங்கட்கிழமை (16) பிற்பகல் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த வேளையில் அவ்வீதியின் வழியாகச் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சுகிர்தனினை காலால் உதைந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த சுகிர்தனின் உறவினர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்காரர்களைத் துரத்திச் சென்று அவர்களில் இருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். இதில் உரும்பிராயினைச் சேர்ந்த டி.றொபின்ராஜ் (20), எம்.நிராஜன் (23) ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த இருவரினது நண்பர்கள், 7 மோட்டார் சைக்கிள்களில் திங்கட்கிழமை (16) இரவு சுகிர்தனின் வீட்டிற்கு சென்று வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் சுகிர்தன் பலியாகியதுடன், சகோதரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வந்ததில், றொபின்ராஜ், நிராஜன் ஆகியோரினை அடித்துப் படுகாயமடையச் செய்தனர் என்ற குற்றச் சாட்டில் சுகிர்தனின் சகோதரர்களான செந்தூரன் சாரங்கள் ஆகியோரை திங்கட்கிழமை (23) பொலிஸார் கைதுசெய்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தினையடுத்து உரும்பிராய்ப் பகுதியிலுள்ள 7 வீடுகள் அடித்து நொருக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts