Ad Widget

கொரோனா உச்சம்: முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வடக்கில் 378 பேருக்குத் தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை இதுவேயாகும்.

யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 976 பேரின் மாதிரிகள் நேற்று (திங்கட்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 117 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 66 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 33 பேருக்கும் கிளிநொச்சியில் ஏழு பேருக்கும் வவுனியாவில் ஆறு பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் ஐவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் 61 பேருக்கும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருவருக்கும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் மூவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், கிளிநொச்சி வைத்தியசாலையில் ஐவருக்கும் தருமபுரம் வைத்தியசாலையில் இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா வைத்தியசாலையில் ஐவருக்கும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஐவருக்குத் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஏழு பேருக்கும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் மூவருக்கும் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ். மாநகர சுகாதார அதிகாரி பிரிவில் ஒன்பது பேருக்கும், சாவகச்சரி சுகாதாரப் பிரிவில் எட்டுப் பேருக்கும் சண்டிலிப்பாய், நல்லூர் மற்றும் உடுவில் சுகாதாரப் பிரிவுகளில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் 960 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 261 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Posts