காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் வெளியிடுவார் என, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெனீவாவில் தனியார் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மனிதாபிமான நாகரீக பிரச்சினையாகக் காணப்படுகிறது. எனவே, இதிலிருந்து ஒருபோதும் நகர்ந்து செல்ல முடியாது என ஜனாதிபதிக்கும், நீதியரசருக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.
இந்நிலையில், காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் தேவைகளுக்கு செவிமடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, ஐந்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகங்களை ஸ்தாபிப்பது அவசியமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அரசாங்கம். 1.3 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.