யாழ்.பத்தமேனிப் பகுதியிலுள்ள வீதியில் 23ஆயிரத்து 240 ரூபா மற்றும் வெளிநாட்டு பணத்துடன் கிடந்த கைப்பையொன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தம்மிடம் ஒப்படைத்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்ற ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கே.எம்.சி.பிரதீப் செனவிரத்தன தெரிவித்தார்.
அச்சுவேலி பத்தமேனியினைச் சேர்ந்த மஹாதேவன் மருதாலினி (வயது 24) என்பவரே இவ்வாறு கைப்பையை ஒப்படைத்துள்ளார்.
மேற்படி கைப்பை அச்சுவேலி இடைக்காட்டுப் பகுதியினைச் சேர்ந்த ஒருவருடையது எனவும் ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பரிசோதகர் தெரிவித்தார்.
‘ஆசிரியையின் நேர்மையான செயலினைப் பாராட்டுவதுடன், இவரை முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களும் செயற்படவேண்டும்’ என குற்ற ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கே.எம்.சி.பிரதீப் செனவிரத்தன மேலும் தெரிவித்தார்.