Ad Widget

ஓமந்தையில் நடந்தது என்ன? இராணுவம் விளக்கம்

army-ruwan-vanikasooreyaகொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வடக்கிலிருந்து வருகைதந்த ஊடகவியலாளர் குழுவுக்கு இராணுவத்தினர் ஓமந்தையில் வைத்து எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஓமந்தையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர், தொடர்ந்து தெளிவுபடுத்துகையில்,

ஓமந்தை சோதனை சாவடியில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்தே சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், வானொன்றில் பெருந்தொகையான ஹெரோயின் கடத்தப்படுவதாக ஓமந்தையிலுள்ள இராணுவத்திற்கு நேற்றிரவு 9 மணிக்கும் 9.15 க்கும் இடைப்பட்ட நேரத்தில் தகவலொன்று கிடைத்துள்ளது.

பஸ்ஸில் வந்த ஒருவரினாலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த பஸ்ஸுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த சகல வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர்.

10 நிமிடங்களுக்கு பின்னர் வந்த வானொன்றை சோதனைசெய்தபோது அந்த வானில், சாரதி ஆசனத்திற்கு கீழிருந்த சிகரெட் பெட்டிக்குள் சிறிய தொகை கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனையடுத்து வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை பொலிஸார் எடுத்துள்ளனர்.

ஏனைய ஏழுபேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணையின் போதே அவர்கள் ஊடகவியலாளர்கள் என்று தெரியவந்துள்ளது.

வானில் இருந்தவர்கள் ஊடகவியலாளர்கள் என்று தெரிந்துகொண்டு இராணுவத்தினர் இடையூறு விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும். பொலிஸாரின் விசாரணைக்கு இராணுவத்தினர் இலகு படுத்தி கொடுத்துள்ளனர்.

அந்த ஊடகவியலாளர் மற்றொரு வாகனத்தில் இன்று அதிகாலையே கொழும்புக்கு திரும்பியுள்ளனர் என்றார்.

அந்த கஞ்சாவையை இராணுவத்தினரே போட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றரே என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

பொலிஸாரே கஞ்சாவை மீட்டுள்ளனர். இராணுவத்தின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை இராணுவம் முற்றாக மறுக்கின்றது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

ஓமந்தையில் தடுத்துவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை!

ஏழு செய்தியாளர்கள் ராணுவத்தால் தடுத்து வைப்பு

Related Posts