பேராதனை முருத்தலாவவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தமை குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற இறப்புகளைத் தடுக்க, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து சுகாதார பிரிவுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கோரோனா வைரஸ் இறப்புகள் குறித்த அறிக்கையைத் தொகுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மத்திய மாகாணம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
71 வயதான தந்தை ஜூன் 2ஆம் திகதி உயிரிழந்தார். 68 வயதான தாய் ஜூன் 17ஆம் திகதி உயிரிழந்தார். இவர்களது 39 வயது மகன் ஜூன் 23ஆம் திகதி உயிரிழந்தார். மூவரும் கோவிட் -19 காரணமாக உயிரிழந்தனர் என்று சுகாதாரத் துறையினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.