குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனின் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா பிளான்க் இலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“குறித்த தாக்குதலை நடத்துவதற்கு இஸ்லாமிய இயக்கமொன்றை தெரிவு செய்து வேறொரு நாட்டில் ஐ.எஸ் அமைப்பு நடத்திருக்க முடியும்.
ஆனால் இடம்பெற்ற தாக்குதல்கள் அனைத்துக்கும் இலங்கையைச் சேர்ந்த பிரஜைகளே காரணமாக உள்ளமையினால் ஐ.எஸ் அமைப்பை இங்குள்ள இயக்கமொன்றே தெரிவு செய்திருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது.
மேலும் தாக்குதலை நடத்துவதற்கான பயிற்சிகளையும் உபகரணங்களையும் ஐ.எஸ் அமைப்பிடமிருந்தே அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் இணைந்து செயற்படாவிடின் நாட்டு மக்களின் பாதுகாப்பை ஒருபோதும் உறுதிப்படுத்த முடியாது” என ஜோனா பிளான்க் தெரிவித்துள்ளார்.