ஐரோப்பா கண்டத்தில் 5 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றன. எனவே, அவர்களை அழிக்க அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன. அதை பொறுத்து கொள்ள முடியாத ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பா கண்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 13–ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மிகப்பெரிய தொடர் தாக்குதலை நடத்தினார்கள். அதில் பலர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் மேலும் 5 நகரங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. பாரீஸ், லண்டன், பெர்லின், பெல்ஜியத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் உள்ளிட்ட 5 நகரங்களில் இத்தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக 60 தீவிரவாதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஏற்கனவே புகுந்து உலா வருகின்றனர். இத்தாக்குதல் வெவ்வேறு நாட்களில் நடைபெறுமா? அல்லது ஒரே நேரத்தில் அதிரடியாக நடத்தப்படுமா? என தெரியவில்லை.
எனவே, ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.