Ad Widget

“எனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்“ என ஈராக் மக்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கட்டளை

ஈராக்கின் மொசுல் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தோன்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி மக்கள் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

irac

ஈராக்கில் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக போராடி வரும் சன்னி பிரிவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பலுஜா, மொசுல், திக்ரித் ஆகிய நகரங்களை கைப்பற்றியது. தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய நகரங்களை வைத்து அமைக்கப்பட்டுள்ள முஸ்லீம் நாட்டுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதியை தான் தலைவராக அறிவித்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாத பாக்தாதி முதன்முறையாக மொசுல் நகரில் பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்.

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றி கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாதி(42) உரை நிகழ்த்தியுள்ளார். அவர் 21 நிமிடங்கள் பேசிய வீடியோ சனிக்கிழமை தீவிரவாதிகள் பயன்படுத்தும் 2 இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நடத்திய புனிதப் போரில் போராளிகளுக்கு ஆண்டவன் வெற்றியை பரிசாக அளித்துள்ளான். வீரர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்துவிட்டு தங்களின் இமாமை தேர்வு செய்ய கலிபாவை அறிவிக்க வந்தனர் என்று பாக்தாதி தெரிவித்துள்ளார்.

உங்களுக்காக பொறுப்பை ஏற்பது ஒரு சுமை தான். நான் உங்களை விட சிறந்தவன் ஒன்றும் இல்லை. நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று நினைத்தால் எனக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார் பாக்தாதி.

நான் தவறான பாதையில் சென்றால் எனக்கு அறிவுரை வழங்கி என்னை தடுத்து நிறுத்துங்கள். நான் இறைவனை கீழ்படிவது போன்று நீங்கள் என்னை கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பாக்தாதி.

பள்ளிவாசலில் அரபு மொழியில் பேசிய பாக்தாதி கருப்பு நிற ஆடை அணிந்து கருப்பு நிற டர்பன் கட்டியுள்ளார். இந்நிலையில் வீடியோவில் பேசியது பாக்தாதி தானா என்ற சந்தேகம் எழுந்தது.

பாக்தாதியின் வீடியோ கேலிக் கூத்தாக உள்ளது. அதில் பேசியிருப்பது அவர் தானா என்று ஈராக் அரசு கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் பாக்தாதி காயம் அடைந்ததாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

Related Posts