யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் ஊடகவியலாளராக பணிபுரியும் தங்கராசா பிரபாகரன் (33) என்பவர் வரணி – கொடிகாமம் வீதியில் வைத்து 4 பேர் கொண்ட கும்பலினால் நேற்று வெள்ளிக்கிழமை (04) மதியம் தாக்குதலுக்குள்ளானதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி ஊடகவியலாளர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, உதவி கேட்டு ஒருவர் மறித்துள்ளார். அதன்போது, மோட்டார் சைக்கிளினை நிறுத்திய வேளை குறித்த நபர் மோட்டார் சைக்கிளின் திறப்பினை எடுத்துவிட்டு, பிரபாகரன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து பிரபாகரன் திருப்பி தாக்கவே, அங்கு மறைந்து இருந்த மேலும் மூவர் வந்து பிரபாகரன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நபர்கள் முகத்தினை மறைத்திருக்கவில்லையெனவும், அவர்களை எத்தருணத்திலும் அடையாளங் காட்டுவேன் என பிரபாகரன் முறைப்பாட்டில் தெரிவித்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.