Ad Widget

உள்ளுராட்சி சபைகளின் அசமந்தப் போக்கால் மக்களுக்கான பல அபிவிருத்தித் திட்டங்கள் பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன

மக்களுக்கான அரசியல் தலைமை சரியானதாக அமைந்தால்தான் அப்பகுதிக்காகன அபிவிருத்திகள் அனைத்தும் சரியான வகையில் முன்னெடுக்க முடியும். ஆனால் அவ்வாறானதொரு அரசியல் தலைமையை தமிழ் மக்கள் இன்றுவரை தெரிவு செய்யாது போனதால்தான் இன்று நாம் கண்டுவரும் அரசியல் தளம்பலுக்குக் காரணம் என அமைச்சரின் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்தார்.

0jjjjjjj

வாழ்வாதார உதவிகளை பெறுவதற்காக சங்கத்தானை பகுதி சமுர்த்தி உத்தியோகத்தரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு கணேசர் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகன் மேலும் கூறுகையில்

யாழ்.மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திகளையும் மீளாய்வு செய்து குறைகளை நிவர்த்திசெய்வதற்காக நாம் தற்போது அனைத்து பகுதிகளாலும் மக்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற மக்கள் சந்திப்புகளில் பங்குபற்றி வருகின்றோம்.

மக்களது வாழ்வியலில் அக்கறையுடன் இருக்கவேண்டிய ஒவ்வொரு உள்ளுராட்சி சபைகளும் இன்று மக்களை பாராமுகமாக இருப்பதனால் எத்தனையோ பல அபிவிருத்திகள் பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உங்களது தேவைகளை பூர்த்திசெய்ய யார் தகுதியானவர்களோ அவர்களை உங்கள் பிரதிநிதிகளாக்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது.

எத்தனை அழிவுகள் வந்தபோதும் தமிழையும் தமிழ் மக்களையும் அவர்களது உணர்வுகளையும் கட்டிக்காத்து வருவது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தான். நாங்கள் அபிவிருத்தியையும் அரசியலையும் சமதட்டில் வைத்து நகர்வுகளை மேற்கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் அரசியல் பலம் எம்மிடம் போதியளவு இன்மையால் அரசியல் காய்நகர்த்தல்களை செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம்.

அன்று எமக்கு அனைத்து அதிகாரங்களுடன் கூடிய தீர்வு கிடைக்கவிருந்தும் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் முன்னகர்வுகளில் ஏற்பட்ட தவறுகளால் பல சந்தர்ப்பங்களை இழந்துவிட்டோம்.

தூர நோக்குடன் சிந்திக்கக் கூடிய சக்தி மக்களிடம் என்று வருகின்றதோ அன்று தான் தமிழர்களுக்கான நல்லதொரு அரசியல் தீர்வும் கிடைக்கும்.

உங்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக பெற்றுத்தர நவடிக்கை எடுக்கிறேன். அடிப்படை வசதி இன்றி இருக்கும் உங்களது வாழ்வாதாரங்களை உயர்த்துவதுதான் எமது இலக்காகும்.
தமிழ்த் தேசியம் மட்டும்பேசிக் கொண்டால் இன்று வளர்ந்துவரும் சமூகச் சீர்கேடான செயல்கள் பாரதூரமான விளைவுகளுக்கு மீண்டும் தமிழ் மக்களை கொண்டு சென்றுவிடும். யதார்த்தமான நிலைமைகளை புரிந்து மக்களை நல்வழிப் படுத்துவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

தொடர்ந்தும் போலித் தேசியம் பேசுபவர்களை நம்பி அவர்களின் பின் செல்வீர்களானால் எதிர்காலத்தில் அரசியல்தீர்வுடன் அபிவிருத்தியும் இல்லாது போய்விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் ஈ.பி.டி.பியின் தென்மராட்சி இணைப்பாளர் சாள்ஸ் உரையாற்றுகையில், தென்மராட்சியைப் பொறுத்தவரை நகரசபை, பிரதேச சபைகளை உள்ளடக்கிய ஒரு பகுதியாகும். இப் பகுதியில் சமுர்த்தி வங்கி கட்டடத்தை கட்டுவதற்கு கூட எமது பகுதி ஆட்சியாளர்கள் தடையாக இருக்கின்றார்கள். வறிய மக்களின் சொத்தாக இருக்கும் இந்த சமுர்த்தி வங்கி கட்டடத்தை கட்டுவதற்கு போலித் தமிழ் தேசியம் கூறுபவர்கள் தடையாக இருப்பது பற்றி நீங்கள் சிந்தித்து தீர்ப்புக்கூற வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது.

வறிய மக்களின் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த சமுர்த்தித்திட்டத்தை அன்று குடாநாட்டிற்குள் கொண்டுவர அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அவர்கள் முயன்றபோது இன்றைய தமிழ்த்தலைவர்கள் எனக் கூறுபவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அமைச்சர் அன்றைய சந்திரிக்கா அரசுடன் அரசியல் ரீதியில் போராடி இந்த திட்டத்தை வடமாகாணத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் இன்று ஏறக்குறைய 56ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் ஈ.பி.டி.பியின் தென்மராட்சி இணைப்பாளர் சாள்ஸ், நகரசபை உறுப்பினர் திருக்குமரன், சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Posts