Ad Widget

உடுவில் கிழக்கில் விபச்சார விடுதி! ஒருவர் கைது!! மூவர் தப்பியோட்டம்!!

அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் விபச்சார விடுதி இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் தங்கியிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட்ட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர். அதுதொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளனர். 2 பெண்கள் உள்பட மூவர் தப்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது.

உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக டயலொக் என்ற நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகம் ஒன்று இயங்கிவந்தது. அங்கு நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மற்றும் 2 இளம் பெண்களும் தங்கியிருந்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர், அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டுள்ளார். தனது பிரிவில் இயங்குவதாயின் பதிவு செய்வது கட்டாயம் என கிராம அலுவலகர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தம்மை டயலொக் நிறுவனத்தின் அலுவலகர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அந்த நபர்கள், பொலிஸாருக்கு தமது நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்று கிராம அலுவலகருக்கு தெரிவித்துள்ளனர்.

அதனால் இந்த விடயம் உடுவில் பிரதேச செயலரின் கவனத்துக்க தன்னால் கொண்டு செல்லப்பட்டதாக உடுவில் கிழக்கு கிராம அலுவலகர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை உடுவில் அம்பலவாணர் வீதியில் பயணித்த இளம் பெண் ஒருவரை 2 பெண்கள், 2 ஆண்கள் இணைந்து வழிமறித்துக் கடத்த முற்பட்டுள்ளனர். அவர்களுடன் மல்லுக்கட்டித் தப்பித்த அந்த இளம் பெண், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். பொலிஸாரின் வருகையை அறிந்ததும் அந்த நபர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர். எனினும் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தை அடுத்து வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், பொதுமக்கள் என பலர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குழுமியுள்ளனர். விபச்சார விடுதி தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உள்பட அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று சுன்னாகம் பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளது.

Related Posts