ஈ.பி.டி.பி கடந்த காலங்களில் பல தவறுகளை இழைத்துள்ளதாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ள அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, அந்தத் தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்லத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அரசியல் யாப்பு சார்ந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கிடைத்த பல சந்தர்ப்பங்களை தமிழ் அரசியல் தலைவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டதாகவும் வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி. தவராசா குற்றம்சாட்டினார்.
அதேவேளை வட மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் கிடைத்தும் அதனை சரியாக நிர்வகிக்க முடியாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியதால் அவருக்கு எதிராக அங்கிருந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாற்றுக் கருத்துகளுக்கு செவிமடுக்காத இடத்தில் தான் பேசிப் பயனில்லை என்று கூறி தவராசா தனது உரையை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.