Ad Widget

இருகண்ணிலும் பார்வையிழந்தவரின் மனைவியின் முறையீட்டால் அதிர்ந்த வடக்கு முதலமைச்சர்

“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

krisnapuram_visit

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களான குருகுலராஜா, ஜங்கரநேசன், சத்தியலிங்கம் உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் மற்றும் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் உறுப்பினர்கள் ஆகியோர்,கிளிநொச்சியின் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் பொன்னகர் விவேகானந்தநகர் ஆனந்தநகர் அம்பாள்குளம் செல்வாநகர் விநாயகபுரம் போன்ற பிரதேசங்களின் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்களை பா.உறுப்பினர் சி.சிறீதரனின் அழைப்பின் பேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இவர்களுக்கு கிருஸ்ணபுரம் விளையாட்டு மைதானத்தில் பாரதிபுரம் வித்தியாலயம் மற்றும் கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ணா வித்தியாலய மாணவர்களால் எளிமையான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிருஸ்ணபுரம் விளையாட்டு மைதானத்தில் கரைச்சி பிரதேசபை உறுப்பினர் பாலாசிங்க சேதுபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் ஆரம்பத்தில் கிளிநொச்சியின் மேற்படி கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு வாழ்வியல் தேவைகளில் தெரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மக்களுக்கு இருக்கக்கூடிய தேவைகள் குறித்தும் இது குறித்த அரச தரப்பு அரசியல்வாதிகள் அவர்களுக்கு அடிவருடிகளாக செயற்படும் நபர்கள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கொண்டுவந்தார்.

கடந்த கால யுத்தத்தில் தன் இருகண்களிலும் பார்வைப் புலனை இழந்தவர், தன் மனைவி பிள்ளையுடன் முதமைச்சரின் முன்வந்து தமக்கு இந்தச் சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து உருக்கமாக கூறினார்.

தமக்கு தம் வாழ்வை கொண்டு செல்ல தயவு செய்து உதவுமாறு வேண்டிக்கொண்டனர். உதவிக்காக பல நிறுவனங்களின் வாசல்களில் ஏறி இறங்குகின்ற தலைவிதி எங்களுடையது.

சமூகசேவை உத்தியோகத்திரிடம் உதவி கோரபோனபோது அவர் என்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். அவர் என்ன பிளானை எதிர்பார்க்கின்றார் என்ற எனக்குத் தெரியவில்லை என முதலமைச்சர் முன் தெரிவித்த கண் பார்வையிழந்தவரின் இளம் மனைவி, தயவு செய்து எங்கள் நிலையை கருத்தில் கொண்டு உதவிக்கு வழிவகுக்குமாறு வேண்டிக்கொண்டார்.

அப்போது முதலமைச்சர் பார்வையிழந்தவரை அருகே அழைத்த கையை பற்றி உதவு செய்து தருவேன் என உறுதி அளித்தார்.

முதலமைச்சரை அவமதித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரனும்

கிளிநொச்சியின் மிகவும் பின் தங்கிய பிரதேசங்களின் குறைகளை கண்டறியும் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர் அடங்கிய குழுவின் கிருஸ்ணபுரம் கிராமத்தில் நடந்த கலந்துரையாடலில் முதலமைச்சரால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும்,

மக்களின் நலன்கருதிய இந்தக்கலந்துரையாடலில் இவர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இது மக்களிடையே ஏற்பட்டிருந்தது.இப்பிரதேச மக்களின் வீட்டுத்திட்டம் குடிநீர் மின்சாரம் வீதி போன்ற துறைகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடுடைய இந்த இரண்டு தமிழ் அரச அதிகாரிகள் அரச அடிவருடிகளாக செயற்படுவது மக்களாலும் முதலமைச்சராலும் உணரப்பட்டுள்ளது.

மாற்றுவலுவுள்ளோர் மற்றும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் நலன்பேண கிளிநொச்சி பழைய வைத்தியசாலையில் நலன்பேணும் இல்லம் அமைக்கத்திட்டம் மருத்துவத்துறை அமைச்சர் சத்தியலிங்கம் உறுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு மாற்றுவலுவானவர்கள் ஏராளம் பேர் மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் வாழ்கிறார்கள் என அங்கு வந்திருந்த சமூக சேவையாளர் சிவமாறன் முதலமைச்சரின் குழுவினருக்கு தெரிவித்தார்.

சிவமாறன் மேலும் தெரிவிக்கும்போது, மாற்றுவலுவுள்ளோர் பல்வேறு நிலைகளில் உள்ளனர். கண் பார்வையை இழந்தவர்கள், கால்களை, கைகளை இழந்தவர்கள் என பல நிலைகளில் குடும்பஸ்த்தர்களாகவும் இருந்துகொண்டு பலத்த துயரங்களை எதிர்கொள்கின்றனர்.

அதிலும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாக இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியது. அவர்களும் அவர்களின் குடும்பங்களும் படுகின்ற இன்னல்கள் சொல்லி மாளாதவை.

எனவே இவர்களை தகுந்த முறையில் பராமரித்து அவர்களின் நலன்பேண வடமாகாணசபை விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த வடமாகாண வைத்தியத்துறை அமைச்சர் சத்தியலிங்கம், வவுனியாவில் இவர்களுக்கான பராமரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் கிளிநொச்சி பழைய வைத்திய சாலை கட்டிடத்தில் இவர்களுக்கான ஒரு பராமரிப்பு நிலையத்தை உருவாக்க திட்டமிடுவதாக உறுதிபடக்கூறினார்.

குளங்கள் வாய்க்கால்களை புனமைத்துத் தாருங்கள் விவசாய அமைச்சர் ஜங்கரநேசனிடம் வேண்டுகோள்

பாரதிபுரம், மலையாளபுரம் கிருஸ்ணபுரம் ஆகிய பிரதேசங்களை அண்டி இரண்டு குளங்கள் உண்டு. அவை புனரமைக்கப்பட்டு அதன் வாய்க்கால்கள் சீராக்கப்பட்டு நீர்ப்பாசனம் செய்யப்பட்டால் இந்த பிரதேசமக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுமென அங்கு வந்திருந்த கமக்கார அமைப்புப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அதே வேளை வீட்டுக் கிணறுகளை ஆழப்படுத்தி நீர்ப்பற்றாக்குறை பிரச்சினையை போக்கு வடக்கு மாகாண சபையால் விசேட திட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென மேலும் வேண்டுகோள் விடுத்தனர்.

தற்பொழுது விவசாய அமைச்சினால் சில நாட்களுக்கு முன் வட்டக்கச்சி மாயவனூர் கிராமத்தை அண்டிய புளுதியாறு ஏற்று நீர்ப்பாசன திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமென மக்களால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளில் கலந்துரையாடலை அதிபர்கள் தொடர்பாக கல்வி அமைச்சர் விசனம்

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் விளையாட்டுக் கழகத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மக்களின் பல்வேறு குறைபாடுகள் பற்றி ஆராயப்பட்டது.

முக்கியமாக குறித்த பின்தங்கியுள்ள கல்வி நிலை குறித்து கருத்துக்களை கிராம மக்கள் தெரிவித்தபோதும் இப்பிரதேச கல்வி நிலைதொடர்பாக கருத்துத் தெரிவிக்க கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாரதிபுரம் மகா வித்தியாலயம், அன்னை சாரதா வித்தியாலயம், விவேகானந்தா வித்தியாலயம், மலையாளபுரம் திருவள்ளுவர் வித்தியாலயம், செல்வாநகர் அ.த.க.பாடசாலை ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துரையாடலை புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கல்வி குருகுலராஜா கலந்துரையாடலுக்கு வந்த மக்கள் மத்தியில் விசனம் வெளியிட்டார்.

ஆயினும் இந்த தங்கிய பிரதேசததில் பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் அதிபராக கமையாற்றி ஓய்வுபெற்ற அதிபர் இராஜேந்திரம் தன் கடமையை இன்றும் தவறாது வந்து தான் அதிபராக இருந்த பாடசாலைகளின் பிள்ளைகளின் நலன் கருதி கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts