Ad Widget

இனிமேல் மின்சார தடை இல்லை!

நாட்டில் கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டுவரும் நாளாந்த மின்சார தடை நாளை முதல் அமுல்படுத்தப்படாதென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை (வியாழக்கிழமை) முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக மூன்று கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக 500 முதல் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று அமைச்சரவையில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts