Ad Widget

இந்திய பிரதமர் இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து நேற்று மாலை 6.30 மணியளவில் நாடு திரும்பினார்.

நேற்று கொழும்பில் ஆரம்பமான ஐக்கியநாடுகள் வெசாக் வைபத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நேற்று முன்தினம் மாலை கொழும்பை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்திய பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்பின்னர் கொழும்பு கங்காராமவில் இடம்பெற்ற மத வழிபாடுகளிலும் கலந்துகொண்டார். பின்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்று காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 14வது ஐ.நா.சர்வதேச வெசாக் ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து ஹற்றன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளித்தார்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார் . இதனை தொடர்ந்து கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் மோடி கட்டுநாயக்க விமான நிலையத்திதை மாலை வந்தடைந்தார்.

இந்திய பிரதமரை வழியனுப்புவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமைச்சர்களான கயந்த கருணாதிலக , நிமல் சிறிபால டி சில்வா , மலிக் சமரவிக்ரம ஆகியோரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலான்சூரியவினால் இநிதிய பிரதமரின் நிகழ்வுகளை உள்ளடக்கிய இறுவெட்டு இந்திய பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இந்திய பிரதமரை வழியனுப்புவதற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்களும் விமானநிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Related Posts