Ad Widget

அந்த வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளுடையதே – கோட்டாபய ராஜபக்ஷ

மிரிஹான பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த வேனின் இலக்கம் போலியானது எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அன்று வௌ்ளை வேன் கலாச்சாரத்தை தாம் ஏற்படுத்தியிருப்பதாக எங்கள் மீது குற்றம்சாட்டியவர்கள் விஷேடமாக சோபித தேரர் போன்றவர்கள் இதற்கு எதிராக இப்பொழுது கதைப்பார்களா என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

சிவில் சமூக அமைப்பின் நல்லாட்சி இதுவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அன்று நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்ட போது இராணுவ மயப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததாகவும் ஒரு நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கம் என்பன கூட நாட்டின் பாதுகாப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புக்கு குறைந்த முன்னுரிமையே வழங்குகின்றது எனவும் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

Related Posts