Ad Widget

அச்சுவேலி வைத்தியசாலையின் ஆண்கள் விடுதி சேதம்

Hospital_Logoஅச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் ஆண்கள் விடுதிகள் இரண்டு மிகவும் சேதமடைந்துள்ளால், அவற்றை மீள அமைத்துத் தருமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பொது அமைப்புக்களிடம் கோரியுள்ளதாக வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரி சண்முகசுந்தரம் சிந்துஜா இன்று செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தார்.

1946ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த விடுதிகள் இதுவரை காலமும் எவ்வித புனரமைப்புமின்றி பாழடைந்துள்ளது. விடுதிகளின் கூரைகள், வாசல் கதவுகள் ஆகியவை உடைந்தும் கட்டடத்தின் தூண்கள் தூர்ந்தும் உள்ளன.

இந்த விடுதிகளை இனிமேல் புனரமைக்க முடியாது. இவற்றை உடைத்து மீண்டும் புதிய கட்டடமே அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு விடுதியிலும் தலா 12 பேர் தங்கி சிகிச்சை பெறமுடியும்.

இந்த வைத்தியசாலைக்கு நீர்வேலி, சிறுப்பிட்டி, வசாவிளான், குட்டிப்புலம், இடைக்காடு, மட்டுவில், ஈவினை, புன்னாலைக்கட்டுவான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

மேலும், மேற்படி கிராமங்களில் மக்கள் மீள்குடியேறி வருவதால் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கின்றது.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்தபோது, அடுத்த வருடம் (2015) வடமாகாணசபை நிதியில் ஒதுக்கம் செய்து அமைத்துத் தருவதாக உறுதியளித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

Related Posts