Ad Widget

பெண் இயக்குனரான கீதாஞ்சலி ஆண்களை பற்றிய படத்தை எடுத்துள்ளார்: செல்வராகவன் பெருமிதம்

பிரபல இயக்குனர் செல்வராகவன் எழுத்தில், அவருடைய மனைவி கீதாஞ்சலி இயக்கியுள்ள படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. இப்படம் வருகிற புத்தாண்டு தினத்தில் வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பத்திரிகையாளர் மத்தியில் செல்வராகவன் பேசும்போது, 15 வருடங்களுக்கு முன்னால் இங்கே இரண்டு அறிமுக இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அது நானும் என்னுடைய தம்பியும் நாயகனுமான தனுஷும்தான்.

நீங்கள் தான் எங்களை பெற்றோருக்கு பின் கவனமாக வழிநடத்தி சென்றீர்கள். அதேபோல் முதன் முறையாக படத்தை உருவாக்கி இருக்கும் இந்த குழுவுக்கு ஆதரவு அளித்து எங்களை வழிநடத்தியது போல் இந்த மாலை நேரத்து மயக்கும் குழுவையும் வழிநடத்த வேண்டும்.

படத்தின் முதல் காப்பியை பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு நிஜமாகவே இப்படம் புதுமையாக இருந்தது. நான் ஆண் இயக்குநராக இருந்து பெண்களின் உணர்வுகளை பற்றிய படத்தை இயக்கினேன். இப்படத்தில் பெண் இயக்குநராக இருந்து கீதாஞ்சலி ஆண்களை பற்றிய படத்தை இயக்கியுள்ளார்.

வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து கொண்டு படத்தின் இயக்குநர் கீதாஞ்சலி அவர்களை படப்பிடிப்பு தளத்துக்கு அனுப்புவது நிச்சயம் புதுவித அனுபவமாக தான் இருந்தது. அவர் படபிடிப்புக்கு சென்றாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தைகளை பற்றி விசாரித்து கொண்டே இருப்பார்.

இப்படத்தின் மூலம் நாயகன் பாலகிருஷ்ணா கோலா, இசையமைப்பாளர் அம்ரித், ஆகியோரை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி. படத்தின் தயாரிப்பாளர் எனக்காக மட்டுமே படத்தொகுப்பு செய்ய வேண்டும் என்று மற்ற படங்கள் எதிலும் வேலை செய்யாமல் என்னுடனேயே பணியாற்றி பயணம் செய்து வந்தார். 7 ஜி படத்தில் இருந்து அவர் என்னுடன் வருகிறார். புதிய படைப்பாளிகளை நாம் வரவேற்போம் என்றார்.

Related Posts