Ad Widget

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு : ஐ.நா. அதிகாரி

தமிழர் தாயக பிரதேசங்களில் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தற்போதும் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார். ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி பென்ஜமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜெயப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு எனத்தெரிவித்த அவர், தற்போதும் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இரண்டு தரப்பிலுமே குற்றங்கள் இழைக்கப்பட்டன. இலங்கை இராணுவம் பாரிய போர்க்குற்றங்களை இழைத்தது.

தமிழ்த் தலைமைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து தமிழர்களை விடுவித்ததாக இலங்கை இராணுவம் கூறுவது வெறும் பரப்புரையாகவே கருதவேண்டும். இலங்கை இராணுவம் இனப்படுகொலைகளை செய்தது என்று கூறுவதே நியாயமானது. இலங்கையில் நிகழ்ந்த கொடுமைகள் நிச்சயமாக இனச் சுத்திகரிப்பை நோக்கி நடத்தப்பட்டவையாகும்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தமிழர்கள் இலங்கையில் இருப்பதை விரும்பவில்லை. அதனால் தமிழர்களின் இனத்துவப்பரம்பலை மாற்றி, அவர்களை வரலாற்றில் இருந்து அகற்றும் முனைப்பையே மேற்கொண்டிருந்தது” எனத்தெரிவித்தார்.

பென்ஜமின் டிக்ஸ் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பகுதியில் 2004 இல் இருந்து 2008ஆம் ஆண்டுவரை ஐ.நா.வின் தொடர்பாடல் முகாமையாளராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts