Ad Widget

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இக்குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது.

குவியம் மீடியா நிர்வாக இயக்குனர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வைத்திய கலாநிதி சிவன் சுதன் (தயாரிப்பாளர் – தூவானம் திரைப்படம்), முன்னாள் யாழ். வலயக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன், சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம், கர்ணன் படைப்பக நிறுவுனர் சண்முகநாதன் சபேசன், யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறைத்தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக்குறும்படப்போட்டியில் முதலிடத்தை கிஷாந் இயக்கிய “கேளன்” குறும்படம் பெற்றுக் கொண்டது. அவர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் 50,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

இரண்டாமிடத்தை ஜனா மோகேந்திரனின் “வெற்றிக்கதை” குறும்படமும் 3 ஆம் இடத்தை ஷாஜாவின் “புதிய பாதை” குறும்படமும் பெற்றுக்கொண்டது. இவர்களுக்கு வெற்றிக்கேடயமும் முறையே 30,000 மற்றும் 20,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.

தவிர, முதல் 10 இடங்களுக்குள் தெரிவான ஏனைய 7 குறும்படங்களுக்கும் தலா 5,000 ரூபாய் பணப்பரிசும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Related Posts