Ad Widget

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்திற்கு இலங்கையில் தடை!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படத்துக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் மாதம் தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இலங்கையில் திரையிட தடை விதித்தனர். இயக்குநரின் பிரதிநிதிகள் எவ்வளவோ முயன்றும் முயற்சி பயனளிக்கவில்லை. இறுதிப் போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இடம் பெறவில்லை. இருந்தும் படம் திரையிட ஏன் தடை விதிக்கப்பட்டது என கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, “படத்தில் வரும் செய்திகளும், துணைக் கதைகளும், வசனங்களும், ஒரு பாடலும் மிகவும் உணர்ச்சி மயமாக உள்ளது. சேனல் 4- இல் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி பாலசந்திரனும், இசை பிரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கை அரசுக்கும், இராணுவத்தினருக்கும் எதிராக உள்ளது. இலங்கையில் படத்தைத் திரையிட அனுமதித்தால் பல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியது.

அதனால் இயக்குநரும், சக கலைஞர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து இயக்குநர் ஈழன் இளங்கோ கூறும் போது, “உலகமெங்கும் வாழும்மக்களை இப்படத்தை பார்க்க வைப்போம். தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களும் இதை பார்ப்பார்கள். அப்போது தான் ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

Related Posts