போர்க்குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளே பிரதானக் காரணமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போர்க்குற்றம் சாட்டப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சுதந்திரமாக இலங்கை தீவில் வலம்வந்தனர்.
தாமிருந்த கட்சியை விட்டுவிலகி புதிய கட்சியை ஆரம்பித்து அதற்கு தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்தக் கட்சியின் வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளே ஆகும். அவர்கள் ஜெனிவாவில் சர்வதேச விசாரணை வேண்டாமென கூறியமையே இதற்கான பிரதான காரணமாகும்” என மேலும் தெரிவித்தார்.