வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிப்பு – யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் தாம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கலந்துரையாடியதுடன் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டையும் பதிவுசெய்தனர்.

நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29, 30ஆம் திகதிகளில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல்கள் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பட்டியலில் வெளிவாரிப் பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த எந்தவொரு பட்டதாரிகளும் உள்வாங்கப்படவில்லை என பட்டியல்கள் மூலம் கண்டறியப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் அண்மையில் மாகாண சபைகளில் நியமனம் வழங்கப்பட்ட சிலரின் பெயர்களும் உள்ளடங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக புறக்கணிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

Related Posts