மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
யாழ்.திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது.
அது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பலாலி வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மது போதையில் வந்த இரு இளைஞர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபரை மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்தில் வயோதிபர் படுகாயமடைந்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அதன்போது விபத்துக்கு உள்ளான இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை அங்கிருந்து மீட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த நால்வரும் மோட்டார் சைக்கிளை மீட்டு செல்வதனை அவதானித்த அங்கிருந்தவர்கள் அதனை தடுக்க முற்பட்ட போது அவர்களை அச்சுறுத்தி விட்டு மோட்டர் சைக்கிளை எடுத்து சென்றுள்ளனர்.
அதேவேளை குறித்த மோட்டார் சைக்கிள் விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்த போதும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.