யாழ்ப்பாணம் கோட்டையில் நேற்றையதினம் இரவு இரண்டாவது தடவையாகவும் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. பொதிகளுடன் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாகனத்தில் வந்திறங்கி கோட்டைக்குள் நுழைந்தனர் என்று பொலிஸ் அவசர பிரிவு 119இற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் முன்னெடுக்கப்படுகிறது என அறியமுடிகிறது.
அங்கு சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தேடுதல் நடத்தினர்.
முன்னதாக இரவு 8 மணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுமார் 30 நிமிட தேடுதலின் பின்னர் அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அங்கிருந்து வெளியேறினர். சந்தேகத்துக்கு இடமாக அங்கு எவரும் இருக்கவில்லை என்று பொலிஸ் தரப்புகள் தெரிவித்தன.
இந்த நிலையில் மீளவும் இரவு 9.30 மணியளவிலிருந்து கோட்டைக்குள் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது
இதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு பின்புறமாக நிறுத்திவைக்கப்பட்ட கார் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்தக் காரில் களுத்துறையைச் சேர்ந்தவர் வருகை தந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.