இலங்கையுடனான உறவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூடுதல் முக்கியத்துவம் வழங்குகின்றார் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு பேரவை மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் உலகின் வேறு எந்த நாடும் இலங்கை போன்று இவ்வளவு துரிதமாக முன்னோக்கி நகரவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், இது இலகுவான விடயமல்ல எனவும், இதனால் அமெரிக்கா இலங்கைக்கு தனது ஆதரவை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா, மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும், தேர்தல் நடந்த 16 மாதங்களில் ஜனாதிபதி மைத்திரியின் அரசு பெரும் முன்னேற்றங்களைக் கண்டிருப்பதாகம் அவர் கூறியுள்ளார்.
“நவம்பரில் நான் இலங்கை சென்றிருந்த போது பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயமின்றி செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் கூறினர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் காணிகள் திருப்பிக் கொடுக்கப்படுகின்றன. பல மக்கள் மீள்குடியேறி வருகின்றனர்.
இவ்வாறு குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றம் கண்ட, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை நான் முன்னொருபோதும் கண்டதில்ல” எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.
இலங்கை 2015 இலிருந்து மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறுதலில் உலக சம்பியனாக உள்ளது எனக் கூறிப்பிட்ட அவர், உலக தலைவர்கள் பலரும் தத்தம் அதிகாரங்களை அதிகாரிக்கும் யாப்புத் திருத்தங்களைக் கொண்டு வரும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிகாரத்தை அரசியல் திருத்தம் மூலம் குறைத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
மேலும், ஐ.நா. சமாதானப்படை செயற்பாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்தவாறு உள்ளது. ஆயினும், இடைக்கால நிதி, நிரந்தரமான நல்லிணக்கம், அரசாள்கையின் தரத்தை மேம்படுத்தல், கிடப்பிலுள்ள அல்லது மிக மெதுவாக நடைபெறும் அரச காரியங்களைத் துரிதப்படுத்தல் என்பவை தொடர்பாக பல விடயங்களில் கூடுதல் செயற்பாடுகள் தேவையாக உள்ளன என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.