ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனவும் சிறீலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் இன அழிப்பிற்கான அனைத்துலக விசாரணையைக் கோருவோமென்றும் கனேடிய பழமைவாதக் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும்(NCCT) மற்றும் கனடாவில் தமிழர் பிரதேசங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராம்டன், ஆட்டாவாவைச் சேர்ந்த அமைப்புகளும் கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவி ரோணா அம்புரூஸ் அம்மையார் அவர்கள் உடனான உயர் மட்டச் சந்திப்பை மேற்கொண்டனர். இச் சந்திப்பில் தமிழர் தரப்பில் சில முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் ஈழத்தமிழர்களின் வரலாற்றுப் பதிவும், ஈழத்தமிழர்களுக்கு காலங்காலமாக சிறீலங்கா அரசினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது. ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கே உரித்தான சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்கக்கோரி ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் தற்போதுள்ள புதிய இலங்கை அரசு கண்துடைப்பிற்காக சில முன்னேற்றத்தைக் காட்ட முயற்சிக்கின்றனர் என்றும், தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை மறைமுகமாக தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர் என்றும் ஆதாரத்துடன் எடுத்துக் கூறினர். கனடியத் தமிழர் தேசிய அவையினால் (NCCT) ஏப்ரல் 13, 2014 ல் ஒருங்கமைக்கப்பட்ட 80 அமைப்புக்கள் ஒன்று கூடி எற்படுத்திய தமிழர் சமூக பொது ஆயத்தினால் உருவாக்கப்பட்ட ஆவணமும் இச்சந்திப்பில் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவி தமிழர்கள் தரப்பின் ஆதாரபூர்வமான தரவுகளை முற்று முழுதாக உள் வாங்கி, தமது கட்சி தமிழர்களின் தேவைகளை முன்னின்று அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி வழங்கினார். தமது கட்சி ஆட்சியிலிருக்கும் போது பொது நலவாய நாடுகளின் கூட்டத்தை இலங்கையில் வைத்த காரணத்தால் முற்று முழுதாக பகிஷ்கரித்தது மட்டுமல்லாது போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்புக்கெதிராக தொடர்ச்சியாக உலக அரங்கில் உரத்துக் குரல் கொடுத்ததென்பதையும் நினைவூட்டினார்.
இச் சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிச் தலைவி விடுத்த உத்தியோக பூர்வ அறிக்கையில் ஈழத் தமிழ்த் தேசிய இனத்திற்கெதிரான போர்க் குற்றம் மற்றும் இன அழிப்பை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இதனை தற்போதுள்ள அரசாங்கத்திடமும் வேண்டுகோளாக முன் வைத்தார்.