சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் தேடியுள்ள ஈழத்தமிழர்கள் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக சுவிஸ் அகதிகள் சபையை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் இடம்பெற்றுவரும் நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனையடுத்தே சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தமது நாட்டில் புகலிடம் கோரியுள்ள ஈழத்தமிழர்கள் வெகுவிரைவில் நாடு கடத்தப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரியிருக்கும் ஈழத்தமிழர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவிஸ் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தார். நாடு திரும்புகின்றவர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் உயிர் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது அச்சுறுத்தல் போன்ற விடயங்களினால் சுமார் 50 ஆயிரம் பேர் சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.