வக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கர்ப்பிணி பெண் பலியானதையடுத்து ஆத்திரமுற்ற பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சேர்ந்து விபத்துக்கு காரணமான அந்த வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம், இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பித்து ஓடிவிட்டார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், வாகனத்தை தீயிட்டு கொளுத்தியவர்களைத் துரத்தியதுடன், வாகனத்தின் சாரதியையும் தேடிப்பிடித்து கைது செய்தனர் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வாகனத்தின் பெருமளவான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவத்தில் பலியான கர்ப்பிணியின் சடலம் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து கோப்பாய், காங்கேசன்துறை, ஆகிய பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் பகல் 12.45 மணியளவில் நிலைமையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.