தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தாது இறால் பிடிப்பதற்கு அனுமதி வழங்குமாறு குருநகர் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தடைசெய்யப்பட்ட றோலர் பயன்படுத்தி குருநகர் மீனவர்கள் இறால் பிடிப்பை மேற்கொள்ளக் கூடாது என நீர் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனால் குருநகர் மீனவர்கள் 5மாதங்களாக தொழிலுக்குச் செல்லவில்லை. இதனால் ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களும் கல்விச் செயற்பாட்டைத் தொடர முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய தினம் குருநகர் பகுதி மீனவர்களின் அழைப்பின் பேரில் வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆனோல்ட் இந்த வடகடலில் இறால் பிடிப்பதற்கு பேசாலை,பள்ளிமுனைபோன்ற பிரதேசங்களில் தடைசெய்யப்பட்ட உபகரணத்தை பயன்படுத்தி இறால் பிடிக்கின்றனர்.ஆனால் யாழிற்குமட்டும் புதிய சட்டமா?என்ற கேள்வியை எழுப்பியதுடன் யாழ்.பிரதேசத்தில் வாழும் குருநகர் பகுதி மீனவர்கள் 5மாதகாலமாக தொழிலுக்குச் செல்லவில்லை.இதனால் கடற்தொழில் அமைச்சு உடனடி நிவாரணம் வழங்குவதாகவும்,இல்லையேல் மாற்றீடான உபகரணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கும் என்று தெரிவித்தும்அவர்களுக்கான நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
ஆகவே யாழப்பாணம் குருநகர் பகுதியில் வாழும் மீனவர்கள் இன்றிலிருந்தே படகு மூலம் இறால் பிடிக்கச் செல்லலாம் ஆனால் சட்டவிரோதமான முறையில் சட்டவிரோத உபகரணங்களை பயன்படுத்ததுவதை தவிர்த்து இறால் பிடிக்கச் செல்லலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தப் பிரச்சனை தொடர்பாக வடமாகாண சபையில் பிரேரணையொன்று முன்வைத்து மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
எனினும் நீங்கள் அனைவரும் ஒன்றித்து ஏகமனதாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.அதாவது சட்டவிரோதமான உபகரணங்களை பயன்படுத்தாது படகு மூலம் இறால் பிடிக்கச் செல்லுவதாக யாழ்.குருநகர் பகுதி மீனவர்கள் ஏகமனதாக தீர்மானம் ஒன்றை எடுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.