யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றம் கடந்த 28 ஆம் திகதி தீர்ப்பளித்து இருந்தது.
இந்நிலையில், கடந்த 29 ஆம் திகதி திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 30 ஆம் திகதி மதியம் குறித்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
கைதி தப்பி சென்ற நிலையில், சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றச்சாட்டில் பிறிதொரு வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.