தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எல் நினோ காலநிலை நிலைமை குறித்து ஆசிய பிராந்திய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
அந்த மதிப்பீட்டின்படி, எல் நினோ நிலைமை காரணமாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையின் பல பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், டிசம்பர் முதல் பெப்ரவரி வரை வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைவதோடு இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கையில், காலநிலை அபாயத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையின் பொருளாதார அழுத்தமும் அதிகரிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த அபாயம் இன்னும் பாரிய தாக்கமாக மாறவில்லை என்பதால், முன்ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானமிக்க சந்தர்ப்பம் இன்னமும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தற்போது அனுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகப் பல நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.