3 தமிழர் சுட்டுக் கொலை!! ‘உங்க வேலையை பாருங்க’.. தமிழ்நாடு அரசுக்கு டிகே சிவகுமார் சொன்ன பதில்!

கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு அரசும் தமிழக அரசியல் தலைவர்களும் தலையிடக் கூடாது என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா வனத்துறையினரால் 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 18) எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமும் அளித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசும் தமிழக அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டி.கே.சிவகுமார் அளித்த பேட்டி: இது கூட்டாட்சி நாடு. எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. இந்த அடிப்படையான கலாசாரத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவர்களுக்கு என சொந்த பிரச்சனைகள் உள்ளன என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் மாநிலத்தை எப்படி பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும், நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். அவர்களது நிர்வாகத்தில் (தமிழ்நாடு அரசு) நான் தலையிட விரும்பவில்லை.

முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவர்கள் அவர்களது வேலையை செய்யட்டும்.. நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.

Related Posts