அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் – அமைச்சர் கண்டனம்

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ள இத்தூபியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சேதம், சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் காண வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை எந்த விதமான எதிர்மறை கைகளும் பாதிக்க அரசு அனுமதிக்காது.

மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இப்படியான நடவடிக்கைகளைத் தடுக்க சமூக ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

Related Posts