Ad Widget

8 மீனவர்களை விடுவித்தது முல்லைத்தீவு நீதிமன்றம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் எட்டு இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவினை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இலங்கை மீனவர் ஒருவரின் படகை, கூட்டமாக அந்தப் பகுதிக்குள் வந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளில் ஒன்று மோதியுள்ளது.

இதனால் இலங்கை மீனவரின் படகு சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைடுத்து கடலில் வீழ்ந்த தன்னையும், மற்றொருவரையும் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த உள்ளுர் மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கூட்டி வந்ததாக குறித்த மீனவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருந்தார்.

பின்னர் கரையில் இருந்த உள்ளுர் மீனவர்கள் சிலர் 5 படகுகளில் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவைப் படகு ஒன்றையும் அதில் இருந்த 8 இந்திய மீனவர்களையும் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவர்களை விடுவித்து முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Posts