Ad Widget

8 நாட்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்புகிறது சமையல் எரிவாயு விநியோகம்!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்கள் லிட்ரோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தினமும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. இதனால் கடந்த 8 நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.

எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 3,950 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்த நிலையில், அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்படி, இன்று நண்பகலின் பின்னர், சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், மேலும் 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை தாங்கிய கப்பல் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts