நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வாழைப்பழம், மாம்பழம் மற்றும் பப்பாசிப்பழம் போன்றவற்றுக்கு இவ்வாறான நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த கட்டமாக இவ்வாறான நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தும் இடங்களைச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தகுந்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் வியாபாரிகள் இந்த முறையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றால், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.