Ad Widget

’24’ படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையையும், மிகப் பெரிய வெற்றியையும் தரும்

’24’ படத்தின் மூலம் இழந்த வெற்றியை மீண்டும் மீட்டெடுத்து ஆக வேண்டும் என்று சூர்யா ’24’ படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறாராம். ‘பசங்க 2’ படத்தில் அவர் நடித்திருந்தாலும் அது ஒரு சிறப்புத் தோற்றம்தான், அவருடைய ரசிகர்களுக்கான படமாகவும் அந்தப் படம் அமையவில்லை.

soorya-24

‘அஞ்சான்’ படத்தில் படிந்த அவப் பெயரைத் துடைக்க ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தையும் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், மீண்டும் தோல்வி என்ற மாசு படிந்ததுதான் மிச்சமானது. அந்த இரண்டு படங்களின் தோல்வி சூர்யாவை வெகுவாகவே பாதித்துவிட்டதாம். இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல் புன்னகையுடனே இருக்கிறார் என்கிறார்கள்.

’24’ படம் நிச்சயம் தனக்கு ஒரு திருப்புமுனையையும், மிகப் பெரிய வெற்றியையும் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமாக உண்டு என்கிறார்கள். இதுவரை வெளிவந்த சூர்யா படங்களிலிருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்பதை இந்தப் படத்தின் சில போஸ்டர்கள் வெளியானதிலிருந்தே தெரிய வந்துள்ளது. அந்த போஸ்டர்களே படம் மீதான நம்பிக்கையும் தருவதால் படத்தின் வியாபாரப் பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டது. சில ஏரியாக்களின் வியாபாரமும் முடிந்துவிட்டது என்கிறார்கள்.

24 படத்தை 24 மணி நேரமும் இடைவிடாமல் படக்குழுவினர் செதுக்கிக் கொண்டிருக்கிறார்களாம். அடுத்த வாரம் 24ம் தேதி வெளியாவதாகச் சொல்லப்பட்ட டீசர் கூட தள்ளிப் போக வாய்ப்பிருக்கலாம் என்கிறார்கள். ஆனால், டீசர் வெளியீடு பற்றி இன்னும் எந்தத் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளார்கள்.

அடுத்து, ‘தெறி’ படத்துடன் ’24’ வருமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது. ‘தெறி’ படம் ஏப்ரல் 14ம் தேதி வருவது உறுதி என்று தயாரிப்புத் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் ’24’ டீசர் மற்றும் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Posts