Ad Widget

2015 பட்ஜட் வாக்கெடுப்பு இன்று!

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், கட்சித் தாவல்கள் ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

இந்த வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

“போர் நிறைவுக்கு வந்து 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களின் தேவைகளைக் கருத்தில்கொள்ளாமல் பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சமர்ப்பித்திருந்தார்.

இதனை நானும் எமது எம்.பிக்களும் வரவு – செலவுத்திட்ட விவாதங்களின்போது கடுமையாக எதிர்த்து உரையாற்றியுள்ளோம். இந்த நிலையில் இன்று மாலை நடைபெறவுள்ள வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பிலும் அதனை எதிர்த்து வாக்களிக்கத் தீர்மானித்துள்ளோம்.

இதில் மாற்றுக் கருத்துக்கருத்துக்களுக்கு இடமில்லை” – என்று சம்பந்தன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளும் எதிர்த்து வாக்களிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அரசிலிருந்து வெளியேறிய ஜாதிக ஹெல உறுமய வாக்கெடுப்பில் பங்குபற்றாது என்று ஒரு தகவலும், சில வேளை எதிர்த்து வாக்களிக்கும் என்று இன்னொரு தகவலும் தெரிவிக்கின்றது.

அதேவேளை, அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மு.கா. எம்பிக்கள் சிலர் இந்தப் பட்ஜட்டை எதிர்த்து வாக்களிக்கவேண்டும் அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிக்கவேண்டும் என்று நேற்று கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர் என்று அறியமுடிகின்றது.

Related Posts