யாழ். பல்கலை முன்றலில் பாலியல் சுரண்டல்களுக்கு எதிராகப் போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் உட்பட இருவர் மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த விசாரணைக் காலத்தை மேலும் இழுத்தடிக்காது உடனடியாகத் துரிதப்படுத்துமாறு கோரி, இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் “பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்த சில முக்கிய வாசகங்கள்:

  • “பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைக் கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்”

  • “பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்”

  • “குற்றத்தை மறைக்கச் சட்டத்தை ஆயுதமாக்காதே”

  • “கண்ணியத்தை இழந்து கல்வியைப் பெறும் இடமா யாழ் பல்கலைக்கழகம்?”

  • “தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே, பாலியல் சுரண்டல்களுக்கு மௌனம் ஏன்?”

போன்ற பல்வேறு  வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். கல்வி கற்கும் உயர்தர நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகச் சட்டத்தையோ அல்லது காலத்தையோ ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் இதன்போது போராட்டக்காரர்கள் காவல் துறையினரினதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

Related Posts