Ad Widget

20 கி.மீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் நகரும் வானிலை: வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள செய்தியிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கையில், “அரபிக்கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட வலுவடைந்த தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 20 கி.மீற்றர் வேகத்தில் வடமேற்குத் திசையில் நகர்கின்றது.

தற்போது சூறாவளியாக வலுவடைந்ததன் காரணத்தினால் இதற்கு ஓமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட ‘லுவான்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது ஓமான் நாட்டின் சலாலா பிரதேசத்திலிருந்து கிழக்கு தென்கிழக்காக 1040 கி.மீற்றர் தூரத்திலும், ஜேமன் நாட்டின் சொகொற்றா தீவிலிருந்து கிழக்கு தென்கிழக்காக 920 கி.மீற்றர் தூரத்திலும், லக்‌ஷதீபத்திலிருந்து மேற்கு வடமேற்காக 1260 கி.மீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகிறது.

இது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் ஓமான் நாட்டிற்கும் ஜெமன் நாட்டின் கரையோரப் பிரதேசத்திற்கும் இடையில் அடுத்துவரும் 5 நாட்களில் கரையை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அந்தமான் தீவிற்கு வடக்காக தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்க வலயமானது வலுவடைந்து கொண்டு வருகின்றது.

இது அடுத்த 25 மணி நேரத்தில் தாழமுக்கமாக வலுவடைந்து, அதனையடுத்து வரும் 72 மணித்தியாலத்தில் வடமேற்குத் திசையில் நகர்ந்து, இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts