Ad Widget

2 மாதத்திற்கு பிறகு டாக்டர்கள் விளக்கம் தருவது ஏன்?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் கோபத்துடனும், வருத்தத்துடனும் இருக்கிறார்கள். தமிழகம் இருண்ட காலத்தில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சசிகலாவை எதிர்க்கின்றனர்.

திடீரென டாக்டர் ரிச்சர்டு பீலே வந்து ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை பற்றி விளக்கம் தந்து இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த நேரத்தில் தந்து இருக்க வேண்டியது தானே. அப்போது எந்த உண்மையும் சொல்லாமல் 2 மாதத்துக்கு பிறகு தற்போது விளக்கம் தருவது ஏன்?

ஜெயலலிதா நன்றாக இருந்த போது ஒரு புகைப்படமோ, கண்காணிப்பு பதிவையோ எடுக்க முடியாதா?. இது முழுக்க முழுக்க பொய் பிரசாரம். இவர்கள் அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை. எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் தற்போது தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவினர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

அப்போது, செய்தியாளர்கள் மருத்துவர்கள் குழுவினர் சரமாரியாக பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது தமிழகமே எதிர்பார்த்திருந்த போது சிகிச்சை குறித்தும் மரணம் குறித்தும் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் ஐயம் தெரிவித்தனர்.

அதற்கு, “ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. உலகின் உயர்தர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. சிகிச்சையில் யாரும் குறுக்கிடக்கிடவில்லை. நாங்கள் சுதந்திரமாகவே செயல்பட்டோம். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தகவலும் மறைக்கப்படவில்லை.

மாரடைப்பு ஏற்படும் வரை ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தார். மாரடைப்பு வராமல் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் வீடு திரும்பி இருக்கலாம். முறையான சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது” என்று மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், “நான் அருகில் இருந்திருந்தாலும் உயிரிழப்பை தடுத்திருக்க முடியாது” என்று மருத்துவர் பீலே கூறினார்.

Related Posts