Ad Widget

180 யாழ்ப்பாணத்தவர்களுடன் இந்தோனேசியக் கடலில் நேற்றுக் கவிழ்ந்தது படகு!

Asylum seekersயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 180 பேர் உட்பட 208 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட படகு ஒன்று அலையால் எத்துண்டு, பாறையில் மோதி நேற்றிரவு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எனினும் படகில் 125 உயிர்காக்கும் அங்கிகள் இருந்ததாகவும் அவற்றின் உதவியுடன் சிலர் மீன்பிடிப் படகுகள் மூலம் தப்பி உள்ளனர் என்றும் தெரியவருகிறது. நேற்று நள்ளிரவு வரை கிடைத்த தகவலின்படி இதுவரை 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் 28 குழந்தைகள் இருந்தனர் என்றும் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. படகில் பயணித்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 180 பேரும், ஆப்கானைச் சேர்ந்த 28 பேரும் இருந்தனர். இவர்கள் சென்ற படகு இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரத்தின் பின்னர் பெரிய அலையால் தூக்கி எறியப்பட்டு பாறை ஒன்றுடன் மோதியது.

அதில் சேதமடைந்தே படகு கவிழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த இந்தோனேஷிய கடற்படையினர் உடனடியாக மீட்புப் பணிக்காக சம்பவம் நடைபெற்ற இடம்நோக்கி விரைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரை இந்த விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

Related Posts