எதிர்காலத்தில் 120,000 இளைஞர் யுவதிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன குறிப்பிடுகிறார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது.
க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த இளைஞர் யுவதிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் பொருட்டு 50,000 இளைஞர் யுவதிகள் அரச பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
மேலும், உள்ளுராட்சி நிறுவனங்களின் சேவைகளை திறன்மிக்கதாக்கும்பொருட்டு 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளுராட்சி நிறுவனங்களில் சேவைக்காக உள்வாங்கப்படவுள்ளனர். இதுதவிர, 20 ஆயிரம் இளைஞர்கள் தொழில் நுட்ப சேவையிலும் நாட்டின் பின்தங்கிய பிரதேச அரச நிறுவனங்களிலும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் 2015 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஏற்ப இடம்பெறவுள்ளன, இதேவேளை, 2014ஆம் ஆண்டில் 51ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும், 13,308 பேர் முகாமைத்துவ உதவியாளர்களாகவும், 4,200 பேர் கிராம உத்தியோகத்தர்களாகவும் 1,017 பேர் பொறியியலாளர்களாகவும், 1,054 பேர் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 1,212பேர் மொழிபெயர்ப்பாலர்களாகவும் தொழில்நுட்ப உதவியாளர்களாகவும் இவ்வாண்டில் நியமனம் செய்யப்படடுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,