தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை வீதித்துள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்துடன் தமிழ் கட்சிகளும் இணைந்து இன்று யாழ். நகரில் காலை 9மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி ஏ9 வீதியூடாக பேரணியாக யாழ். மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்க ஏற்பாடும் செய்திருந்தனர்.
எனினும் குறித்த போராட்டம் மற்றும் பேரணியால் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என 12 முறைப்பாடுகள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்ததையடுத்து போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு பொலிஸாரினால் மன்றிற்கு கோரப்பட்டிருந்தது.
அதனையடுத்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பி. சிவகுமார் இன்றைய போராட்டத்திற்கு தடை விதித்துள்ளார்.
மேலும் இன்று காலை 9மணி முதல் மாலை 4மணிவரை யாழ் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போராட்டங்களோ அல்லது பேரணியோ நடாத்துவதற்கு தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.