Ad Widget

வெசாக் தினத்தில் கூட்டமைப்பின் மே தினம்!

உலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தினால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் எற்பாடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனின் வீட்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘உலக தொழிலாளர் தினத்தினை பௌத்த புனித நாளுக்கு எந்தவித பங்கமும் ஏற்படாத வகையில் நடத்துவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் வேண்டுகோளை கௌரவப்படுத்த வேண்டும் என்பதாலும், உலக தொழிலாளர்களின் தினத்தினைக் கொண்டாட வேண்டும் என்பதாலும் வெசாக் நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடங்களில் கூட்டமைப்பு மே தின நிகழ்வுகளை நடத்தாது.

வடகிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இந்த பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த தலங்களுக்கு இடையூறுகளை விளைவிக்காத வகையில், உலக தொழிலாளர் தினத்தினை மே 01 ஆம் திகதியே கொண்டாட வேண்டுமென்று தீர்மானித்துள்ளோம்.

இந்த தீர்மானம் எந்தவிதத்திலும், பௌத்த புனித நாளை கேவலப்படுத்துவதாக அமையாது. பௌத்த மக்களை கண்ணியப்படுத்தும் முகமாக யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பருத்தித்துறையில் தொழிலாளர் தினத்தினைக் கொண்டாடுவதற்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளடக்கியதாக வெள்ளாவெளிப் பிரதேச சபையின் விளையாட்டு மைதானத்திலும் கொண்டாட தீர்மானித்துள்ளோம்.

உலக மேதினக் கொண்டாடத்திற்கான தீர்மானம் பௌத்த மகாநாயக்கர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்ததாக அமையாது. அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக, இந்த மேதின நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

வடகிழக்கு வாழ் மக்களின் செயற்பாட்டினை கண்ணியப்படுத்தும் முகமாக மேதினக்கூட்டத்தினை 12 மணிக்குப் பின்னர் வர்த்தக வியாபார உரிமையாளர்கள், தமது வர்த்தக நிலையங்களை மூடி தொழிலாளர்கள் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்கோள் விடுத்துள்ளோம்’ அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts